முத்தரையர் வரலாற்றில் திருமயம்
Oct 15, 2024
திருமயம் ஸ்ரீ சத்திய மூர்த்தி.
சத்திய மூர்த்தி மற்றும் திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் இத்தலத்தில் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்தியகிரீஸ்வரர் (சிவன்) கோவிலும், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாக்ஷி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காக்ஷி தந்த திருத்தலம்.
சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.
இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.
திருமயம் நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள சத்தியகிரி மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளுள் கீழ்புறத்தில் உள்ள குடைவரை திருமெய்யர் என்னும் சத்தியமூர்த்தி பெருமாளுக்கான கருவறையாகத் திகழ்கிறது. இப்பகுதியை ஆண்டுவந்த முத்தரையர் கோமரபைச் சேர்ந்த அரசி பெருந்தேவி இந்தக் குடைவரையை விரிவாக்கி மண்டபம் கட்டியுள்ள செய்தியினை இங்குள்ள கல்வெட்டு சான்று பகர்கிறது. முத்தரையர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், போசாளர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களின் ஆட்சிக் காலங்களில் இக்குடைவரைக் கோவில், திருச்சுற்று, மண்டபங்கள், திருக்குளம், என்று விரிவாக்கம் பெற்றுள்ளது.
இக்குடைவரைக் கோவிலின் மூலவரான ’திருமெய்யர்’, ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர் ஆவார். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆகும். திருமெய்யம் குடைவரையின் பின்சுவரை ஒட்டி, 22 அடி நீளம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாள் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலையை சற்றே உயர்த்திய நிலையில், மேற்கில் தலைவைத்து, கிழக்கில் கால்நீட்டியவாறு, ஆதிசேஷன் என்ற பாம்பணையில் அரிதுயில் கொள்ளும் போகசயன நிலையில் காக்ஷக தருகிறார். ஐந்துதலை சேஷநாகம் பெருமாளின் தலைக்குமேலே படமெடுத்துக் குடையமைத்துள்ளது. பெருமாளின் நீட்டிய வலது கை பின்புறம் பாம்பணையை அணைத்தவாறும், இடது முழங்கை மடங்கிய நிலையில், விரல்கள் இடது மார்பைச் சுட்டியவாறும் காட்டப்பட்டுள்ளன. பெருமாளின் காலடியில் பூதேவி அமர்ந்து அஞ்சலி முத்திரை காட்டுகிறார். பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து எழும் தாமரைத் தண்டின் உச்சியில் மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்த நிலையில் நான்முகன் நான்கு கரங்களுடன் காக்ஷி தருகிறார். நான்முகனின் இருபுறமும் தக்ஷனும் அக்னியும் காட்டப்பட்டுள்ளனர். நான்முகனின் இருபுறமும், பெருமாளின் ஆயுத-புருஷர்களாகிய, பாஞ்சஜன்யன், சுதர்சனன், சாரங்கன்,
நந்தகன், மற்றும் கவுமோதகி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். சேஷநாகம் அமைத்துள்ள குடையின் பின்னால் வணங்கிய நிலையில் கருடன் கமனாசனத்தில் உள்ளார். இப்பகுதியிலேயே மார்க்கண்டேயனும், விசுவக்சேனனும் காட்டப்பட்டுள்ளனர். சற்றே அருகில் காட்டப்பட்டுள்ள சிற்பம் பிருகு முனிவருடையதாகும். பெருமாள் கால்நீட்டியுள்ள பகுதிக்கு மேலே சூரியனின் தலையும், சந்திரனின் தலையும், சற்று அடுத்து ரோகிணி எனக்கருதப்படும் பெண்ணின் சிற்பமும் காணப்படுகின்றன. இதனை அடுத்து நான்கு இசைக்கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.
மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது ஸ்தல புராணம்.
இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம்; பல வாழ்க்கை நலன்களும் விளையும்; பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடனடியாக பலனளிக்கும் பரிகாரத் தலம் இத்தாயாரின் சந்நிதி. இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும்.
பழங் காலத்தில் தினமும் இரவில் தாயாருக்கு புட்டும் பாலும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வரும் வழக்கம் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது.
பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கொள்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்படுகிறது.
திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.
இது அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கருதப்படுகிறது.
இந்த சத்திய புஷ்கரணி திருமாலின் அஷ்டாச்சரம் போல எண் கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டியவர் காரைக்குடி மெ.முருகப்ப செட்டியார் மகன் இராமநாதன் செட்டியார். கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 1919.
திருமெய்யம் பெருமாள் கோவில் வளாகத்தில் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 14 கல்வெட்டுகளை புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதி பதிப்பித்துள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் 22 ஆம் தொகுதி, பிரிவு இரண்டில் ஒரு கல்வெட்டும், நா.வள்ளி என்பவாரால் நான்கு கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
பிற்காலக் கல்வெட்டு ஒன்று, குடைவரையின் சீரமைத்தலைப் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு திருமெய்யம் கோவிலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இக்கல்வெட்டு விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. முத்தரையர்கள், பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாக விளங்கினர். விடேல் விடுகு என்பது இவர்கள் சூடிக்கொண்ட பட்டப்பெயராகும். சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி இக்குடைவரையின் முகப்பை ஒட்டித் தூண்கள் அமைத்து சீரமைத்துள்ள செய்தி இக்கல்வெட்டில் பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் 13 ஆம் எண்ணுடன் பதிவாகியுள்ள இக்கல்வெட்டே திருமெய்யம் கோவில் கல்வெட்டுகளுள் காலத்தால் முந்தையது ஆகும். ஆகவே இக்குடைவரைக் கோவிலின் தொன்மை இக்கல்வெட்டின் காலத்திற்கும் முந்தையது ஆகும்.
தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.
இந்த திவ்ய தேச திருத்தலமானது புதுக்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்குடி திருப்பத்தூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் அவசியம் இந்த திருக்கோவிலுக்கு வந்து இறைவனை தரிசித்து இறையருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.